ஷா ஆலம், ஜன 9 - நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் மலேசிய
வானிலை ஆய்வுத் துறையின் வானிலை தொடர்பான முன்னறிவிப்புகள்
மற்றம் வடிகால், நீர்பாசனத் துறையின் எச்சரிக்கைகளை மாநில அரசு
தனது கீழுள்ள துறைகளின் வாயிலாக அணுக்கமாக கண்காணித்து
வருகிறது.
வெள்ள அபாயத்தை எதிர்கொள்வதற்கும் மீட்பு நடவடிக்கைகளை
விரைந்து மேற்கொள்வதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுவதாக பேரிடர் மேலாண்மைத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
தற்போது அனைத்தும் சீராக நடைபெற்று வருகின்றன. கடுமையான
வெள்ளம் தொடர்பில் இதுவரை எந்த புகாரும் பெறப்படவில்லை.
எனினும், நீர் மட்டம் உயர்ந்த காரணத்தால் மூன்று வாரங்களுக்கு
முன்னர் கோல சிலாங்கூரில் இரு நிவாரண மையங்களை திறக்க
வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கும் நிலைமை மோசமாகாமல்
தடுப்பதற்கும் ஏதுவாக மழை தொடர்பான வானிலை அறிக்கைகளையும்
வெள்ள நிலைமையையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவோம்
என அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை இவ்வாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று
மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் முகமது
ஹெல்மி அப்துல்லா கடந்தாண்டு நவம்பர் மாதம் கூறியிருந்தார்.
வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய 10,000
பொட்டலங்களைச் சிலாங்கூர் தயார் செய்துள்ளது.
வெள்ளத்தின் போது மீட்புப் பணிகளை சுமூகமான முறையில்
மேற்கொள்ள மீட்பு சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் நல்ல முறையில்
இருப்பதை உறுதி செய்யும்படி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மற்றும்
பொது தற்காப்பு படை ஆகிய தரப்பினரை மாநில அரசு கேட்டுக்
கொண்டது.




