கோலாலம்பூர், ஜன 9 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதை நோக்கமாகக்
கொண்டதாகக் கூறப்படும் ‘துபாய் நகர்வு‘ தொடர்பில் அரசியல் கட்சிகளின்
பிரதிநிதிகளிடமிருந்து எட்டு புகார்களைக் கோலாலம்பூர் போலீசார்
பெற்றுள்ளனர்.
புத்ராஜெயா, செராஸ், டாங் வாங்கில் உள்ளிட்ட மாவட்ட போலீஸ்
தலைமையகங்களில் இப்புகார்கள் பெறப்பட்டதாகக் கோலாலம்பூர் போலீஸ்
தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மாஜிட் கூறினார்.
இந்த தொடர்பான விசாரணையைப் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்
துறையின் வகைப்படுத்தப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொள்ளும்
என்று அவர் சொன்னார்.
இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் செராஸ் மாவட்ட போலீஸ்
தலைமையகத்தில் தாம் புகார் செய்துள்ளதாக பிரதமரின் அரசியல்
செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடினின் சிறப்பு செயல் அதிகாரி மகாதீர்
முகமது யூனுஸ் தெரிவித்தார்.
நாட்டில் கட்சித் தாவல் தடைச் சட்டம் அமலில் இருந்த போதிலும்
நாடாளுன்ற ஜனநாயக நடைமுறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில்
இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
துபாய் நகர்வு தொடர்பில் டாங் வாங்கி மாவட்ட போலீஸ்
தலைமையகத்தில் புகார் செய்த கெஅடிலான் இளைஞர் பகுதியின் சட்டப்
பிரிவுத் தலைவர் அஷிக் அலி செதி அலிவி, இந்த நகர்வின் பின்னணியில்
உள்ள சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருடின் உள்பட
அனைவரையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய
நாட்டிற்கு அரசியல் நிலைத்தன்மை தேவை. ஆகவே நடப்பு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை சீர்குலைக்க முயலும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.




