நீலாய், ஜன 8- தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக நான்கு மாதக் கைக்
குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் நீலாய் சுகாதார
கிளினிக் நிர்வாகத்திடமிருந்து இச்சம்பவம் தொடர்பான புகாரைத் தாங்கள்
பெற்றதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல்
மாலிக் ஹசிம் கூறினார்.
நீலாய் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அந்தக்
குழந்தையை கிகிச்சைக்காக அந்த கிளினிக்கிற்குக் கொண்டு வந்ததாக அவர்
அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
சம்பவ தினத்தன்று தனது பராமரிப்பில் உள்ள அந்த குழந்தைக்கு பால்
கொடுத்தப் பின்னர் படுக்கை விரிப்பில் பக்கவாட்டில் படுக்க வைத்த போது
திடீரென அக்குழந்தையின் வாயிலிருந்து பால் வழிவதைக் கண்டதாக
அப்பெண் தெரிவித்துள்ளார் என அப்துல் மாலிக் தெரிவித்தார்.
அந்த பராமரிப்பாளர் உடனே அக்குழந்தை எடுத்து அதன் முதுகில்
தட்டியதாகவும் பின்னர் அண்டை வீட்டாரின் உதவியுடன் நீலாய் சுகாதார
மையத்திற்கு கொண்டுச் சென்றதாகவும் அவர் சொன்னார்.
அந்த மருத்துவ மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது
அக்குழந்தை உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
மேலும் அக்குழந்தையின் உடலின் வெளிப்புறத்தில் காயங்கள்
இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றார் அவர்.
சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட
சவப்பரிசோதனையில் அக்குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயமே
மரணத்திற்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.




