கோலாலம்பூர், ஜன 5 - கடந்த ஐந்தாண்டு காலத்தில் வர்த்தக குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 53.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. இக்காலக்கட்டத்தில் 1,433 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மாற்றம் மற்றும் தொலைத்தொடர்பு உலகின் வளர்ச்சியின் காரணமாக புதிய பாணியிலான பல்வேறு மோசடி யுக்திகள் உருவாக்கம் கண்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வணிக குற்றங்களின் அதிகரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய குற்றச் சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் 26,330 மோசடிச் சம்பவங்களில் 6,217 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகக் கூறிய அவர், 2020இல் 2,064 கோடி வெள்ளியும் (27,323 சம்பவங்கள்), 2021 2,206 கோடி வெள்ளியும் (31,490 சம்பவங்கள்), 2022இல் 1,733 கோடி வெள்ளியும், (30,536 சம்பவங்கள்) 2023 211 கோடி வெள்ளியும் (40,350 சம்பவங்கள்) இழப்புகள் பதிவு செய்யப்பட்டன என்றார்.
கடந்த ஐந்து வருடங்களாக புலனாய்வு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறைக்கு பெரும் சவாலாக இருப்பதாகச் சொன்னார்.
தற்போது 839 விசாரணை அதிகாரிகள் உள்ளனர். தற்போதைய ஆள்பல எண்ணிக்கையின் அடிப்படையில் அளவிடப்பட்டால விசாரணை அதிகாரிகளுக்கும் திறக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளுக்கும் இடையிலான விகிதம் 1:48 ஆகும் என்றார் அவர்.




