கோலாலம்பூர், ஜன 5 - சுபாங் மற்றும் அம்பாங் ஜெயாவில் கடந்த மாதம்
27ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இரு
ஆடவர்களைக் கைது செய்ததன் மூலம் நான்கு சக்கர இயக்க
வாகனங்களைக் கொள்ளையிடும் கும்பல் போலீசார் முறியடித்துள்ளனர்.
தனது டோயோட்டா ஹைலக்ஸ் ரக வாகனம் ஜிஞ்சாங், ஜாலான்
செலாசேயில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி காணாமல் போனது
தொடர்பில் ஆடவர் ஒருவர் செய்த புகாரின் அடிப்படையில் 40 மற்றும் 35
வயதுடைய அவ்விரு ஆடவர்களையும் தாங்கள் கைது செய்ததாகச்
செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமது சுக்கார்னோ முகமது
ஜஹாரி கூறினார்.
திருடப்படும் அனைத்து வாகனங்களும் அண்டை நாட்டிற்கு கொண்டுச்
செல்லப்படுவதாகச் சந்தேகிக்ப்படுகிறது என்று நேற்று இங்குள்ள மாவட்ட
போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்
சொன்னார்.
இந்த கொள்ளைக் கும்பல் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அகமது
சுக்கார்னோ இந்த செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார். இந்த கும்பலின்
தலைவன் என நம்ப்படும் ஆ ஹோ என்ற ஆடவனுக்கு தாய்லாந்திலுள்ள
நபர் ஒருவரிடமிருந்து வாகனத்தை திருடுவதற்கான ஆர்டர் கிடைக்கும்.
கொள்ளையிடும் வாகனத்தை இக்கும்பல் சாலையோரம் கைவிட்டுச்
செல்லும். அதனை தாய்லாந்திலுள்ள ஆடவரால் நியமிக்கப்பட்டதாகச்
சந்தேகிகப்படும் நபர் அந்நாட்டிற்குக் கொண்டுச் செல்வார் என அவர்
சொன்னார்.
கைதான சந்தேகப் பேர்வழிகள் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில்
இதுரை ஆறு நான்கு சக்கர இயக்க வாகனங்களை
கொள்ளையிட்டுள்ளதோடு திருடப்படும் ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா
20,000 வெள்ளியைக் கூலியாகப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.




