சிரம்பான், ஜன 5 - முதுகு மற்றும் இரு கணுக்கால்களில் கத்திக் குத்துக்
காயங்களுடன் 74 வயது முதியவர் ஒருவரின் சடலம் இங்குள்ள கம்போங்
பாசீர் ரந்தாவிலுள்ள வீடொன்றில் நேற்று காலை 10.10 மணியளவில்
கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும்
25 மற்றும் 18 வயதுடைய இரு ஆடவர்களை விசாரணைக்காகத் தாங்கள்
தடுத்து வைத்துள்ளதாகச் சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
அரிஃபாய் தராவே கூறினார்.
சந்தேகப் பேர்வழிகளில் ஒருவன் நேற்று மாலை 5.00 மணியளவில் சம்பவ
இடத்தில் கைது செய்யப்பட்ட வேளையில் மற்றோரு ஆடவன்
விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு வந்த போது கைது
செய்யப்பட்டான் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த முதியவரின் சடலம் சவப்பரிசோதனைக்காக சிரம்பான், துவாங்கு
ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர்
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவர்கள் விசாரணைக்கு உதவும்
பொருட்டு சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைமையகம் அல்லது
விசாரணை அதிகாரி ஏ.எஸ்.பி. முகமது பிர்டாவுஸ் சுடீர்மானை 010-3921373
என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.




