ஷா ஆலம், ஜன 5 - கோல லங்காட், உள்ள பண்டார் சவுஜானா
புத்ராவிலுள்ள ஜாலான் எஸ்பி2 பகுதியிலுள்ள குவாரியில் நேற்று ஏற்பட்ட
நிலச்சரிவில் சிக்கி ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் சிக்கிய மற்றொரு ஆடவரை பொது மக்கள் மீட்டு
சிகிச்சைக்காக புத்ரா ஜெயா மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதாக
சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான்
முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
இந்த நிலச்சரிவு தொடர்பில் நேற்று மாலை 4.32 மணியளவில் புகார்
கிடைத்ததைத் தொடர்ந்து தெலுக் பங்ளிமா காராங் தீயணைப்பு
நிலையத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு
ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
மாலை 4.54 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த போது அந்த குவாரி
பகுதியில் 1.2 மீட்டர் ஆழத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதைத்
தீயணைப்பாளர்கள் கண்டனர் என்றார் அவர்.
அந்த நிலச்சரிவு காரணமாக முப்பது வயது மதிக்கத்தக்க இருவர்
மண்ணில் புதையுண்ட வேளையில் அவர்களில் ஒருவரை பொது மக்கள்
மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர் என்று அவர் தெரிவித்தார்.
மற்றொரு நபரை மாலை 6.42 அளவில் தாங்கள் மண் சரிவிலிருந்து
மீட்டதாகவும் எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக நம்பப்படுவதாகவும்
வான் முகமது சொன்னார்.




