கிள்ளான் ஜன 4 - தைப்பூச விழா முறையாகவும் சமய நெறிகளுக்கேற்பவும் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்து சமயம் சார்ந்த அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் சந்திப்பு நடத்தினார்.
இந்த தைப்பூச பணிக்குழுவினர் தைப்பூச விழா சிறப்பான முறையிலும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பணியில் ஈடுபடுவர்.
இந்த விளக்கக் கூட்டத்தில் அரசு சார்பற்ற அமைப்புகள், மலேசிய இந்து தர்ம மாமன்றம் மற்றும் மலேசிய இந்து சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவில் "தர்ம வேல்" திட்டத்தின் கீழ் இலவசப் பூஜைகள் மற்றும் பால்குடம் எடுத்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும் என குணராஜ் கூறினார்.
இதுபோன்று நிகழ்வுகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தப்படுவது தவிர்க்க இந்த தர்ம வேல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். தைப்பூச கொண்டாட்டத்தின் போது பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விரையமாவதைத் தவிர்க்க இந்த பணிக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார் அவர்.
தைப்பூச கொண்டாட்டத்தின் போது கோயில் வளாகங்களில் மதுபானம் அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற செயல்கள் முற்றாகத் தடை செய்யப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை இந்தப் பணி குழு கண்காணிக்கும் என அவர் சொன்னார்.
தைப்பூச கொண்டாட்டத்தின் போது பினாங்கு, ஜொகூர், ஈப்போ,சித்தியாவான், பத்துமலை, கோலா சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணாம் ஆகிய பகுதிகளிலும் இந்த பணிக்குழு செயல்படும் என அவர் சொன்னார்.
எதிர்வரும் தைப்பூசம் கொண்டாட்டம் நாடு தழுவிய நிலையில் அமைதியாக மற்றும் சமூகமாக நடைபெறுவதை இந்த பணிக்குழு உறுதி செய்யும் என குணராஜ் தெரிவித்தார்.




