கோலாலம்பூர், ஜன 4 - நாட்டில் அந்நியத் தொழிலாளர் மேலாண்மை முறையை மேம்படுத்தும் கடப்பாட்டை உள்துறை அமைச்சும் மனிதவள அமைச்சும் கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங்குடன் நேற்று புத்ரா ஜெயாவில் நடத்திய சந்திப்பின்போது இரு அமைச்சுகளும் பகிர்ந்து கொள்ளும் பணி இலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
அந்நியத் தொழிலாளர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பான விவகாரங்களும் இந்த சந்திப்பில் இடம் பெற்றதாக அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது உள்துறை அமைச்சு மற்றும் மனிதவள அமைச்சு பகிர்ந்து கொள்ளும் ஒரே மாதிரியான பணி இலக்குகள் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன என்றார் அவர்.
அந்நியத் தொழிலாளர்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவது இந்த விவாதத்தில் மிக முக்கியமானதாக விளங்கியது. மேலும் 2024 ஆம் ஆண்டில் இந்நாட்டில் அந்நியத் தொழிலாளர்கள் மேலாண்மை முறையை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் தொடர்பான பல்வேறு விவகாரங்களும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. எழுப்பப்பட்ட விவகாரங்களுக்கு விளக்கங்கள் கிடைத்தப் பின்னர் ஊடங்களுக்கு இரு அமைச்சுகளும் கூட்டாக அறிக்கை வெளியிடும் என அவர் தெரிவித்தார்.
அந்நியத் தொழிலாளர் விவகாரம் தொடர்பில் தாம் விரைவில் உள்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளதாக சிம் முன்னதாக கூறியிருந்தார். அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஒரே அதிகாரத்தின் அல்லது ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வருவதும் அதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.




