கோலாலம்பூர், ஜன 4 - நேற்று தொடங்கி வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் 2 கோடியே 90 லட்சம் மலேசியர்களை மத்திய தரவுத்தள மைய அமைப்பில் (பாடு) பதிவு செய்யும் இலக்கை அடைவதை உறுதி செய்வதில் கிராமப்புறங்களில் உள்ள சமூகத் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இந்த அமைப்பின் மூலம் பயனடைவதிலிருந்து யாரும் விடுபடாமலிருப்பதை உறுதி செய்ய நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் நோக்கில் மாநில அரசுகளுடன் கலந்தாய்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன என்று புள்ளி விபரத் துறை தலைவர் டத்தோஸ்ரீ மாஹிடின் உஸீர் கூறினார்.
உட்புறப் பகுதிகளைப் பொறுத்தவரை, செயல்பாட்டு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் கலந்துரையாடல் நிகழ்வுகள் மூலம் மாநில அரசுகளுடன் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
முதல்வர்(சரவாக்), முதலமைச்சர்கள் அல்லது மந்திரி பெசார்கள் மற்றும் மாநிலச் செயலாளர்கள் தலைமையேற்ற மாநில தரவுப் புள்ளியியல் மன்றத்தின் கூட்டங்களையும் நடத்தியுள்ளோம்.
மாவட்ட மட்டத்திலும் நாங்கள் அதே பாணியைக் கடைபிடிக்கிறோம். கிராமத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறோம். அதாவது, 'முழு தேச' அணுகுமுறையை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
கிராமப்புறங்களில் இந்த அமைப்பை ஏற்றுக்கொள்வது தொடர்பில் மாநில புள்ளி விபரத் துறைகள் மற்றும் கள ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் நேர்மறையானவையாக உள்ளதாகவும் தகவல் இலாகா மேற்கொண்ட தகவல் பரப்பும் முயற்சிகளுக்கு நலல பலன் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி பாடு அமைப்பில் 396,181 பேர் பதிவு செய்துள்ளனர்.
பல தரப்பிலிருந்து பெறப்பட்ட கருத்துக்கள், குறிப்பாக பாதுகாப்பு குறித்து கருத்துரைத்த முகமதுஉஸீர், உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட இந்த அமைப்பு சமூகத்திற்குச் சிறந்த சேவையை வழங்குவதற்கு ஏதுவாக எளிதாக மேம்படுத்தும் வசதியையும் கொண்டுள்ளது என்றார்.




