பாடாங் பெசார், ஜன 4 - குற்றச்செயல் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக இம்மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையில் அண்டை நாட்டிற்குக் கடத்தப்படவிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் மானிய விலை எண்ணெய் உள்பட 10 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான பல்வேறு
பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 22 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இச்சோதனை நடவடிக்கையில் 19 முதல் 74 வயது வரையிலான ஆறு
உள்நாட்டு ஆடவர்கள், தாய்லாந்தைச் சேர்ந்த 11 ஆண்கள் மற்றும் ஐந்து
பெண்கள் கைது செய்யப்பட்டதாகப் பெர்லிஸ் மாநில போலீஸ் தலைவர்
டத்தோ முகமது அப்துல் ஹலிம் கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பொருள்களில் 1,400 லிட்டர்
மானிய விலை பெட்ரோல், 981.5 லிட்டர் டீசல், 69 பாக்கெட் சமையல்
எண்ணெய், 12 பிக்ஆப் வாகனங்கள், இரு கார்கள் மற்றும் எண்ணெய்
நிரப்பப்பயன்படும் பல்வேறு சாதனங்களும் அடங்கும் என அவர்
குறிப்பிட்டார்.
இங்குள்ள பாடாங் பெசார் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இந்த விபரங்களை
வெளியிட்டார்.
மானிய விலை பெட்ரோல் மற்றும் டீசலைக் அண்டை நாட்டிற்கு
கடத்துவதற்கு ஏதுவாக அந்த பிக்அப் வாகனங்களில் கூடுதல் கொள்ளளவு
கொண்டு எண்ணெய் டாங்கிகள் பிரத்தியேகமாக பொருத்தப்பட்டிருந்ததாகக்
கூறிய அவர், அவ்வாகனங்கள் அனைத்தும் அண்டை நாட்டிலிருந்து
வந்தவையாகும் என்றார்.
கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சோதனை
நடவடிக்கையில் அரச மலேசிய போலீஸ் படையுடன் சுங்கத் துறை,
குடிநுழைவுத் துறை, உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சு ஆகியவற்றைச் சேர்ந்த அமலாக்க அதிகாரிகளும் பங்கு
கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.




