NATIONAL

புத்தாண்டு சாலைத் தடுப்புச் சோதனையில் 84 பேர் கைது- 6,297 குற்றப்பதிவுகள் வெளியீடு

4 ஜனவரி 2024, 3:34 AM
புத்தாண்டு சாலைத் தடுப்புச் சோதனையில் 84 பேர் கைது- 6,297 குற்றப்பதிவுகள் வெளியீடு

கோலாலம்பூர், ஜன 4 - புத்தாண்டை முன்னிட்டு கடந்த மாதம் 31 மற்றும்

ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட

137 சாலைத் தடுப்புச் சோதனைகளில் பல்வேறு குற்றங்களுக்காக 84 பேர்

கைது செய்யப்பட்டதோடு 6,297 குற்றப்பதிவுகளும் வெளியிடப்பட்டன.

கைதானவர்களில் 52 பேர் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்

சட்டத்தின் கீழும் 24 பேர் 1959ஆம் ஆண்டு குடிநுழைவுத் சட்டத்தின் கீழும்

எண்மர் அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழும் கைது

செய்யப்பட்டதாகப் புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும்

அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ முகமட் அஸ்மான் அகமது

சப்ரி கூறினார்.

இந்நடவடிக்கையின் போது வாகனப் பதிவு எண்கள் நிர்ணயிக்கப்பட்ட

விதிகளுக்கேற்ப இல்லாதது தொடர்பில் மிக அதிகமாக அதாவது 1,788

குற்றப்பதிவுகள் வெளியிப்பட்டதாக கூறிய அவர், வாகனமோட்டும்

லைசென்ஸ் இல்லாத குற்றத்திற்காக மேலும் 1,422 பேருக்கு அபராதம்

விதிக்கப்பட்டது என்றார்.

அதிகாலை 5.00 மணி வரை நீடித்த இந்த சோதனையில் 1984ஆம் ஆண்டு

சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 60வது பிரிவின் கீழ் 366 வாகனங்கள்

பறிமுதல் செய்யப்பட்டன என்றும் அவர் சொன்னார்.

இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு அமலாக்கத் துறைகளைச்

சேர்ந்த 4,378 அதிகாரிகளும் உறுப்பினர்களும் பங்கு கொண்டதாக அவர்

மேலும் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.