கோலாலம்பூர், ஜன 3 - குடியுரிமை தொடர்பான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் கல்வியைத் தொடர்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவர்களின் குடும்பத்தினருடன் கல்வி அமைச்சு சந்திப்பை நடத்தியது.
கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி நெகிரி செம்பிலான் கல்வித் துறை நடத்திய கூட்டம், சம்பந்தப்பட்ட மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்கு ஏதுவாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டது என்று அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குக் குடியுரிமை ஆவணங்கள் தேவைப்படும் விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்காகப் பல பரிந்துரைகள் இச்சந்திப்பின்போது முன்மொழியப்பட்டன என அது கூறியது.
பள்ளியில் மாணவர் பதிவு தொடர்பான நிர்வாகத்தின் அம்சங்களில் உதவ நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகா உறுதி பூண்டுள்ளது. இச்சந்திப்பு இணக்கமான சூழ்நிலையில் இடம்பெற்று சாதகமான முடிவுகளை எட்டியுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து குடிமக்களும் தரமான கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த கலவியமைச்சு எப்போதும் பாடுபட்டு வருகிறது எனவும் அது குறிப்பிட்டது.
பெற்றோர் திருமணத்தைப் பதிவு செய்யத் தவறியது மற்றும் 2013 இல் அவர்கள் விவாகரத்து செய்தது ஆகிய காரணங்களால் எழுந்த குடியுரிமை ஆவணச் சிக்கல்களால்
10 வயது மாணவர் இந்த மார்ச் மாதம் நான்காம் வகுப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
அந்த மாணவர் முன்பு செனாவாங், தாமான் ஸ்ரீ பாகி தேசியப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படித்தார். குடியுரிமை இல்லாததால் பள்ளிக்குச் செல்ல வருடத்திற்கு 120 வெள்ளியை அக்குடும்பம் செலுத்த வேண்டியிருந்தது.
எனினும் கல்வியமைச்சின் புதியக் கொள்கை காரணமாகக் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய பள்ளித் தவணையின் போது அம்மாணவர் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாது என்று பள்ளி தெரிவித்தது.




