ஷா ஆலம், ஜன 2- எதிர்வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி மைஜேபிஜே (MyJPJ)
செயலி வாயிலாகச் சாலை வரி மற்றும் வாகனமோட்டும் லைசெஸ்களை
புதுப்பிக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்
கூறினார்.
இந்நடவடிக்கையின் வாயிலாக நேரத்தையும் செலவினத்தையும் குறைக்க
முடியும் என்பதோடு சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.)
அலுவலகங்களில் கூட்ட நெரிசலையும் கட்டுப்படுத்த முடியும் என்று
அவர் சொன்னார்.
செயலி வாயிலாக சாலை வரியை புதுப்பிக்கும் நடவடிக்கை கட்டங்
கட்டமாக அமல்படுத்தப்படும் எனக் கூறிய அவர், தொடக்கத்தில் தனியார்
வாகனங்களை (உள்நாட்டுப் பிரஜைகள்) மட்டுமே இது
உள்ளடக்கியிருக்கும் என்றார்.
இ-எல்.எம்.எம். எனப்படும் இணைய லைசென்ஸ் புதுப்பிப்பு முறையை
ஊக்குவிப்பதற்காக மலேசிய இலக்கவியல் வாகனமோட்டும் லைசென்சை
தேர்ந்தெடுக்கும் வாகனமோட்டிகள் வரும் பிப்ரவரி 1 முதல் டிசம்பர் 31
வரை லைசென்சை புதுப்பிக்கும் போது 5.00 வெள்ளி கட்டணக் கழிவைப்
பெறுவர் என அவர் தெரிவித்தார்
எனினும், பயண அட்டை, நீண்ட கால வருகை அனுமதி, நிரந்தர
வசிப்பிடத் தகுதி மற்றும் தற்காலிக வசிப்பிடத் தகுதியைக் கொண்டுள்ள
வெளிநாட்டினருக்கு இந்த சலுகை பொருந்தாது என்றும் அவர்
குறிப்பிட்டார்.
2024 இடைக்கால இலக்கிவியல் முறை அமலாக்க காலத்தின் போது இந்த
முறையைப் பயன்படுத்துவதற்கு தங்களைத் தயார் படுத்திக்
கொள்ளாதவர்கள் சாலை வரி மற்றும் வாகனமோட்டும் லைசென்சை மரபு ரீதியில் அதாவது நேரடியாகச் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் லைசென்ஸ் காகிதங்களின் கையிருப்பு
தீர்ந்தவுடன்ன புதிய வடிவில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய
ஒருங்கிணைக்கப்பட்ட லைசென்ஸ்கள் ஜே.பி.ஜே. வெளியிடும் என்றும்
அவர் சொன்னார்.




