கோலாலம்பூர், ஜன 2 - மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை
6.00 மணி நிலவரப்படி நான்கு துயர் துடைப்பு மையங்களில் 80 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு மூன்று நிவாரண மையங்களில் 70 பேர்
மட்டுமே தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பகாங் மாநிலத்தின் மாரான் மற்றும் தெமர்லோவில் உள்ள இரு நிவாரண
மையங்களில் 29 பேர் தங்கியுள்ளதாகத் தேசிய பேரிடர் நிறுவனத்தின
(நட்மா) பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை
கூறியது.
நேற்றிரவு மாரானில் உள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில் 19 பேர்
மட்டுமே தங்கியிருந்ததாக அது தெரிவித்தது.
கிளந்தான் மாநிலத்தின் பாசீர் மாஸ் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள ஒரு
நிவாரண மையத்தில் 26 பேர் தொடர்ந்து தங்கியுள்ளனர். அதே சமயம்
ஜொகூர் மாநிலத்தின் சிகாமாட் மாவட்டத்தில் உள்ள ஒரு துயர் துடைப்பு
மையத்தில் 25 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கிளந்தான் மாநிலத்தின் பாசீர் மாஸில் உள்ள கோலோக்
ஆறு மற்றும் பெர்லிஸ் மாநிலத்தின் ஆராவ் மாவட்டத்தில் உள்ள சுங்கை
ஆராவ் ஆகியவற்றில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவில் உள்ளதாக
வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை கூறியது.
வெள்ளம் காரணமாகப் பாலம் உடைந்தது, நிலச்சரிவு, சாலைகளில் நீர்
பெருக்கு போன்ற காரணங்களால் 26 சாலைகள் போக்குவரத்துக்கு
மூடப்பட்டுள்ளன.




