கோலாலம்பூர், டிச 29 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களில்
உதவிப் பணிகளை மேற்கொள்ள 750 காவல் துறையினரும் படகுகள்,
வாகனங்கள் உள்ளிட்ட 144 சாதனங்களும் அனுப்பட்டுள்ளன.
அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட
தளவாடங்களில் 47 படகுகள், 32 லோரிகள், 59 நான்கு சக்கர இயக்க
வாகனங்கள் ஆறு ஆம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் வேன் ஆகியவையும்
அடங்கும் என்று தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ
ஆயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.
திரங்கானு, கிளந்தான், ஜோகூர், பகாங், சபா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு
இவை அனுப்பப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இங்குள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்ற புக்கிட்
அமான் குற்றச் செயல் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு துறையின்
இயக்குநரின் பணி ஏற்பு மற்றும் பணி ஒப்படைப்பு நிகழ்வுக்கு
தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களில் உள்ள துயர் துடைப்பு
மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை இன்று காலை சிறிது
குறைந்துள்ளது. அம்மாநிலங்களில் உள்ள 103 துயர் துடைப்பு
மையங்களில் நேற்றிரவு 23,011 பேர் தங்கியிருந்த வேளையில் இன்று
காலை அந்த எண்ணிக்கை 23,008 பேராகக் குறைந்துள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு
மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 53 துயர் துடைப்பு மையங்களில் 19,716
பேர் தங்கியுள்ளதாகத் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா)
வெளியிட்ட நாடு முழுமைக்குமான பேரிடர் தொடர்பான சமீபத்திய
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது




