புத்ராஜெயா, டிச 29 - நாட்டில் கோவிட்-19 வைரஸின் புதிய திரிபுகள்
கண்டறியப்படவில்லை என்பதோடு இந்நோயும் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நோயினால் பாதிக்கப்படுவோர் லேசான அறிகுறிகளைக்
கொண்டிருப்பதோடு அவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப்
பெறுவதற்குரிய அவசியமும் ஏற்படவில்லை.
தற்போது மலேசியாவில் ஓமிக்ரோன் மற்றும் அதன் துணை திரிபுகளான
ஜே.என்.-1 உள்பட எக்ஸ்.பி.பி.1.16, எக்ஸ்.பி.பி.1.5.இ.ஜி.5 ஆகிய
தொற்றுகளின் பரவல் காணப்படுகிறது என்று சுகாதார அமைச்சர்
டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
தற்போது நாட்டில் ஊடுருவியுள்ள ஒமிக்ரோன் துணை மாறுபாடு
கடுமையான பாதிப்புகளுக்குக் காரணமாக அமையவில்லை என்பது
கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சுவாசக் குழாயில் பீடித்திருக்கும் வைரஸான இன்புளுயேன்சா போல்
கோவிட்-19 நோய்த் தொற்றும் நம்மிடையே தொடர்ந்து இருக்கும். தொற்று
நோய்கள் அதிகரிக்கும் சாத்தியம் உள்ள தற்போதைய காலக்கட்டத்தில்
சுகதாரம் மற்றும் நடப்பு வாழ்க்கைக்கு இடையே சமநிலைப் போக்கை
கடைபிடிக்கும்படி பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்
சொன்னார்.
கடந்த 17 முதல் 23ஆம் தேதி வரையிலான 51வது நோய்த் தொற்று
வாரத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட்-19
நோயாளிகளின் எண்ணிக்கை 0.5 விழுக்காடாகவும் மரண எண்ணிக்கை 0.8
விழுக்காடாகவும் இருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் மரணமடைவோரின்
எண்ணிக்கை குறைந்த பட்ச அளவில் நிலையாக உள்ளதை இது
காட்டுகிறது என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் புதிய திரிபுகள் பரவல் தொடர்பில்
சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வரும்
என்றும் அவர் தெரிவித்தார்.




