கோலாலம்பூர், டிச 29 - வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நான்கு மாநிலங்களில்
உள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை
இன்று காலை சிறிது குறைந்துள்ளது. அம்மாநிலங்களில் உள்ள 103 துயர்
துடைப்பு மையங்களில் நேற்றிரவு 23,011 பேர் தங்கியிருந்த வேளையில்
இன்று காலை அந்த எண்ணிக்கை 23,008 பேராகக் குறைந்துள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு
மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 53 துயர் துடைப்பு மையங்களில் 19,716
பேர் தங்கியுள்ளதாகத் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா)
வெளியிட்ட நாடு முழுமைக்குமான பேரிடர் தொடர்பான சமீபத்திய
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாசீர் மாஸ் மாவட்டத்தில் உள்ள 30 மையங்களில் 5,102 குடும்பங்களைச்
சேர்ந்த 15,586 பேரும் கோல கிராய் மாவட்டத்தில் 206 குடும்பங்களைச்
சேர்ந்த 5,102 பேரும் தும்பாட் மாவட்டத்தில் 1,147 குடும்பங்களைச் சேர்ந்த
3,231 பேரும் தானா மேராவில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 165 பேரும்
வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளதாக அது தெரிவித்தது.
திரங்கானு மாநிலத்தில் உள்ள 37 நிவாரண மையங்களில் நேற்றிரவு 3,025
பேர் தங்கியிருந்த வேளையில் இன்று காலை அந்த எண்ணிக்கை 3,022
பேராக குறைந்தது. டுங்குன், உலு திரங்கானு, கெமமான், கோல
திரங்கானு, மாராங், செத்தியூ ஆகியவை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட
மாவட்டங்களாகும்.
இதனிடையே, ஜொகூர் மாநிலத்தின் சிகாமாட் மாவட்டத்தில் உள்ள மூன்று துயர் துடைப்பு மையங்களில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் இன்னும் தங்கியுள்ளனர்.
பகாங் மாநிலத்தின் பெரா, ஜெராண்டூட், குவாந்தான், மாரான், ரொம்பின், தெமர்லோ, ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு பத்து நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ள வேளையில் அதில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.




