கோலாலம்பூர், டிச 29 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எஸ்எம்இ) மற்றும் மேபேங்க் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையை எளிதாக்க மலாயன் பேங்கிங் (மே பேங்க்) வெள்ள நிவாரண உதவிகளை வழங்குகிறது.
நிதியுதவி/கடன் திருப்பிச் செலுத்துதல், மாதாந்திர தவணைகளில் குறைப்பு அல்லது திருப்பிச் செலுத்தும் கால நீட்டிப்பு ஆகியவை இந்த உதவிகளில் அடங்கும்.
வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நாடு முழுவதும் உள்ள மே பேங்க் கிளைகள், எஸ் எம் இ மையங்கள், வணிக வங்கி மையங்கள் அல்லது ஆட்டோ ஃபைனான்ஸ் மையங்களுக்குச் சென்று அல்லது தொடர்புகொள்வதன் மூலம் வெள்ள நிவாரண உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
"அனைத்து விண்ணப்பங்களும் மதிப்பீடு செய்யப்படும்" என்று மே பேங்க் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, டெபிட் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் அல்லது வெள்ளத்தின் போது தொலைந்து போன அல்லது சேதமடைந்த காசோலை புத்தகங்களை மாற்றுவது உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளுக்கான கட்டணங்களைத் தள்ளுபடி செய்கிறது.
அதே நேரத்தில், மே பேங்க் குழுமத்தின் காப்பீட்டுப் பிரிவான Etiqa, அதன் காப்பீட்டு பாலிசிதாரர்கள் மற்றும் தக்காஃபுல் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்குப் படிவங்கள் அல்லது ஆதார ஆவணங்கள் எதுவும் தேவைப்படாமல் விரைவான மற்றும் எளிதான மீட்பு முறையைச் செயல்படுத்தியுள்ளது.
- பெர்னாமா




