கோலாலம்பூர், டிச.29: நேற்று மதியம் சுங்கை பூலோ வில் உள்ள தாசிக் பீரு குண்டாங்கில் ஒருவர் தனது நண்பருடன் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 34 வயதான அஸ்மான் ஜூஸ் என அடையாளம் காணப் பட்டதாகச் சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
"இச்சம்பவம் குறித்து பாதிக்கப் பட்டவரின் நண்பரிடமிருந்து பிற்பகல் 3.32 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் புகாரைப் பெற்றனர். உடனே தேடுதல் நடவடிக்கைக்காகப் பத்து ஆராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய (பிபிபி) அதிகாரிகள் குழு மற்றும் நீர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப் பட்டனர் என்றார்.
"பாதிக்கப்பட்டவரின் உடல் 4 மீட்டர் ஆழத்தில் ஏரியின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டது. மாலை 6.10 மணியளவில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப் பட்டது," என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது
ஓராங் அஸ்லி இளைஞர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பொழுதுபோக்கு பகுதிக்குச் சென்று ஏரியில் ஒன்றாக குளித்ததாகவும், அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் மேல் நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முக்லிஸ் தெரிவித்துள்ளார்.
- பெர்னாமா




