புத்ராஜெயா, டிச 29 - பணி நியமனம் மற்றும் பணியிட மாற்ற உத்தரவில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் அந்த உத்தரவின்
அமலாக்கத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க அரச மலேசிய சுங்கத் துறை
இணக்கம் தெரிவித்துள்ளது.
குடும்ப விவகாரம், உடல் நலம் மற்றும் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட
காரணங்களுக்காகச் சில அதிகாரிகளின் இடமாற்றம் ஒத்தி
வைக்கப்பட்டுள்தாக அத்துறை அறிக்கை ஒன்றில் கூறியது.
திறன், சுறுசுறுப்பு மற்றும் உயர்நெறி ஆகிய கூறுகளின் அடிப்படையில்
திறமையான அமைப்பை உருவாக்கும் குறிக்கோளுக்கேற்ப துறை சார்ந்த
ஊழியர்களின் நலனில் சுங்கத் துறை தொடர்ந்து அக்கறை செலுத்தி
வருகிறது என்று அது தெரிவித்தது.
அரசாங்க வரிகளை வசூலிப்பதில் ஆக்ககரமாகச் செயல்படுவதன் மூலம்
நாட்டின் மேம்பாட்டிற்கு அவர்கள் உரிய பங்களிப்பை வழங்குவதை உறுதி
செய்வதையும் இந்நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று
அவ்வறிக்கை குறிப்பிட்டது.
சுங்கத் துறை அதிகாரிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாமல்
அத்துறையின் தலைமை இயக்குநர் பணியிட மாற்ற உத்தரவை
பிறப்பித்துள்ளதாக தீபகற்ப மலேசிய சுங்கத் துறை அதிகாரிகளின்
தொழிற்சங்கத்தின் தலைவர் அப்துல் மாலிக் முகமது ஜின்
குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து சுங்கத் துறை இந்நடவடிக்கையை
எடுத்துள்ளது.
இந்த பணியிட மாற்றம் இறுதியானது என்றும் எந்த மேல் முறையீடும்
ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக
அப்துல் மாலிக் தெரிவித்தார்.
ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த சுங்கத்
துறை அதிகாரிகளை இலக்காகக் கொண்டு இந்த பணியிட மாற்ற
உத்தரவை சுங்கத் துறை அண்மையில் வெளியிட்டிருந்துது.




