ஷா ஆலம், டிச 28: மோசமடைந்து வருவதாகக் கூறப்படும் வெள்ள நிலையை நேரில் ஆய்வு செய்வதற்காகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கிளந்தான் சென்றுள்ளார்.
இன்று மதியம் 12 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் மொத்தம் 21,252 பாதிக்கப்பட்டவர்கள் 67 தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர் என பிரதமரின் அரசியல் செயலாளரின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"பாசிர் மாஸில் 18,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்கை கோலோக்கில் நீர் மட்டம் இன்னும் எச்சரிக்கை அளவிலேயே உள்ளது. வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் கிளந்தானில் பாதிக்கப் பட்டவர்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
"நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிளந்தான் மாநிலத்திற்கு உதவுகிறோம். இன்னல் ஏற்பட்டது, அரசியல் வேறுபாடுகள் ஒரு கணம் ஒதுக்கி வைக்கப் பட்டன" என்று டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் கூறினார்.
பெரித்தான் ஹரியான் அறிக்கையை மேற்கோள் காட்டி, பிரதமர் லுபோக் ஜோங் பாலம், பிபிஎஸ் ஸ்ரீ கியாம்பாங் தேசியப் பள்ளி, ரெபெக் மற்றும் லத்தி அகமா தேசிய இடைநிலைப் பள்ளி ஆகிய மூன்று இடங்களுக்குச் செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
கிளந்தான் தவிர, திரங்கானு, பகாங், ஜொகூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.




