ஜோர்ஜ் டவுன், டிச 28- கடந்த 2019 முதல் 2021 வரை நிறுவனம்
ஒன்றுக்குச் சொந்தமான 445,815 வெள்ளியை நம்பிக்கை மோசடி
செய்ததாக அந்நிறுவனத்தின் கணக்கியல் குமாஸ்தாவுக்கு எதிராக 133
குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
தனக்கெதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட
குற்றச்சாட்டுகளை தே யா லிங் (வயது 41) என்ற அந்த நபர் மறுத்து
விசாரணை கோரினார்.
தங்கத்தின் அசல் தன்மையைக் சோதனையிடும் அந்த நிறுவனத்திற்குச்
சொந்தமான அப்பணத்தை கடந்த 2019 அக்டோபர் முதல் 2021 மே 31 வரை
கைமாற்றியதாகத் தே யா லிங்கிற்கு எதிரான குற்றப்பத்திரிகையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
தீமோர் லாவுட் மாவட்டத்தில் உள்ள ஜாலான் சுங்கையில் இக்குற்றத்தைப்
புரிந்ததாக அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் 14 ஆண்டு
வரையிலான சிறைத்தண்டனை, மற்றும் அபராதம் விதிக்க வகை
செய்யும் தண்டனைச் சட்டத்தின் 408வது பிரிவின் கீழ் அவர் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது,
குற்றஞ்சாட்டப்பட்டவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் 100,000
வெள்ளி ஜாமீனில் விடுவிக்கவும் அவரின் அனைத்துலக கடப்பிதழை
பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும என்று அரசுத்
தரப்பு வழக்கறிஞர் லீ ஜூன் கியோங் நீதிமன்றத்தைக் கேட்டுக்
கொண்டார்.
மாதம் 2,800 வெள்ளி சம்பளம் பெறும் தனது கட்சிக்காரர் 81 வயது
தந்தையைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளதால் ஜாமீன் தொகையை 20,000 வெள்ளியாக நிர்ணயிக்கும்படி தே யா லிங்கின் வழக்கறிஞர்
நீதிபதியிடம் விண்ணப்பித்தார்.
எனினும், அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் 66,50 வெள்ளி ஜாமீன்
தொகையை நிர்ணயித்த நீதிபதி ஷர்மிளா அப்துல் சமாட், வழக்கின்
அடுத்த விசாரணையை எதிர்வரும் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதிக்கு ஒத்தி
வைத்தார்.




