கோத்தா திங்கி, டிச.28: நேற்று தி வெஸ்டன் டெசாரு கடற்கரையில் அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன சிங்கப்பூர் நபர் இன்று அதிகாலை, நீரில் சடலமாக மீட்கப் பட்டார்
அந்நபரின் (49) சடலம் காலை 5.30 மணியளவில் கடற்கரையில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப் பட்டது என தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) செயல்பாட்டுத் தலைவர், மூத்த உதவி தீயணைப்புத் தலைவர் மஸ்ரி இப்ராஹிம் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர், கருப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். அவர் காணாமல் போனதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பொதுமக்களால் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது மனைவியும் தனது கணவரின் உடலை உறுதிப்படுத்தினார்," என்று மஸ்ரி இன்று பெர்னாமாவிடம் கூறினார்.
மேல் நடவடிக்கைக்காக சடலம் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
நேற்று, மதியம் 12.33 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் அடித்துச் செல்லப் படுவதற்கு முன்பு, பாதிக்கப் பட்டவரும் அவரது 16 வயது மகனும் தண்ணீரின் விளிம்பில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக மஸ்ரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் அந்த நபரின் உடலை மீட்டு கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் நடந்த இடத்தில் வானிலை காரணிகளால் கடற்கரையில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என்று பொது மக்களை எச்சரிக்கும் வகையில் ஏற்கனவே சிவப்புக் கொடியிடப் பட்டதாக மஸ்ரி கூறினார்.
- பெர்னாமா




