ஷா ஆலம், டிச 28 - ஆட்டிஸம் குறைபாடு உள்ள சிறுவன் ஜைன் ரய்யான்
அப்துல் மாத்தின் மரணம் தொடர்பில் புதிதாக எந்த ஆதாரங்களும்
கிடைக்காத போதிலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணை ஒருபோதும்
நிறுத்தப்படாது என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.
முதல் குற்றச் சம்பவம் அதாவது அச்சிறுவன் படுகொலை செய்யப்பட்ட
இடத்தை அடையாளம் காணும் நோக்கில் விசாரணை தொடர்ந்து
நடத்தப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
இந்த வழக்கு மூடப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று
வருகிறது என்று உத்துசான் மலேசியா பத்திரிகையிடம் அவர் கூறினார்.
பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா டாமாய், இடாமான் அடுக்குமாடி
குடியிருப்புக்கு அருகில் ஜைன் ரய்யான் உடல் கண்டுபிடிக்கப்பட்டு
இன்றுடன் 21 நாட்கள் ஆகின்றன.
இந்த விசாரணையின் போது கிடைத்த ஆதாரங்களை மற்றும்
தகவல்களை ஆய்வு செய்வதற்கு அனைத்துலக போலீஸ் துறையின்
(இண்டர்போல்) உதவியை தாங்கள் நாடியுள்ளதாக போலீசார் கடந்த 23ஆம்
தேதி கூறினர்.
அந்த ஐந்து வயதுச் சிறுவன் கடந்த 5ஆம் தேதி தனது குடியிருப்புக்கு
அருகே சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள நீரோடை அருகே இறந்த
நிலையில் கண்டு பிடிக்கப்பட்டான். அவனது உடலிலின் பல இடங்களில்
காயங்கள் காணப்பட்டன.




