கோலாலம்பூர், டிச 28 - ஐந்து மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28,032 பேராக அதிகரித்துள்ளது.
நேற்றிரவு இந்த எண்ணிக்கை 25,763 பேராக மட்டுமே இருந்தது. அவர்கள்
அனைவரும் 137 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் பேரிடர்
கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட நாடு முழுமைக்குமான வெள்ள
நிலவரம் தொடரபான அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாகக் கிளந்தான் தொடர்ந்து
இருந்து வருகிறது. இங்கு திறக்கப்பட்டுள்ள 68 துயர் துடைப்பு
மையங்களில் 21,377 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 8.00
மணியளவில் இந்த எண்ணிக்கை 19,423 பேராக இருந்தது.
திரங்கானு மாநிலத்தில் மொத்தம் 6,289 வெள்ள அகதிகள் 59 நிவாரண
மையங்களில் தங்கியுள்ளனர். நேற்றிரவு 60 துயர் துடைப்பு மையங்களில்
5,983 பேர் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பகாங் மாநிலத்தில் நேற்றிரவு 206 பேராக இருந்த வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 214 பேராக உயர்வு
கண்டது. அவர்கள் ஜெராண்டூட், குவாந்தான், லிப்பிஸ், கேமரன்
ஹைலண்ட்ஸ், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சபா மாநிலத்தில் இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி இரு துயர்துடைப்பு மையங்களில் 31 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 8.00
மணிக்கு இந்த எண்ணிக்கை 30 பேராக இருந்தது.
இதனிடையே, ஜொகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. மெர்சிங் மற்றும் சிகாமாட் ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் 121 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.




