தம்பின், டிச 28- வெடிகுண்டு போன்ற வடிவம் கொண்டு பொருள் ஒன்று
கிம்மாஸ், லாடாங் ஜெலாயில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன்
தொடர்பில் பொது மக்களிடமிருந்து தம்பின் மாவட்ட போலீஸ்
தலைமையகத்தின் நடவடிக்கைப் பிரிவு தகவலைப் பெற்றது.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கிம்மாஸ் போலீஸ் நிலையத்திலிருந்து
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரண்டாம் உலக போரின் போது
வெடிக்காமல் போனதாக நம்பப்படும் எரிவாயு சிலிண்டர் அளவுள்ள
பொருளைக் கண்டனர்.
உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு எல்லை நாடாவை பொருத்திய
போலீசார் தடை செய்யப்பட்ட மற்றும் அபாயகரமான பகுதியாகவும்
அதனை அறிவித்தனர் என்று தம்பின் மாவட்ட துணைப் போலீஸ்
தலைவர் டி.எஸ்.பி. அமிருடின் சரிமான் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அந்த வெடிகுண்டை அழிக்கும் நடவடிக்கையில்
நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு
அழிப்பு பிரிவு மற்றும் தம்பின் மாவட்ட போலீசார் ஈடுபட்டனர் என்றார்
அவர்.
அந்த வெடிகுண்டு சிறு துண்டுகளாகச் சிதறும் வகையில் வல்கன் ஷேப்
சார்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெடிக்கும் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது எனறு அவர் மேலும் தெரிவித்தார்.




