புத்ராஜெயா, டிச 28- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தான், திரங்கானு,
பகாங் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் 647 போலீஸ்காரர்களும் 154
ரேலா தன்னார்வலர் படை உறுப்பினர்களும் பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 35 படகுகள், 29 லோரிகள் மற்றும் 56
நான்கு சக்கர இயக்க வாகனங்களும் அனுப்பப்பட்டுள்ளதாக உள்துறை
அமைச்சு கூறியது.
பேரிடர் நிலையைக் கருத்தில் கொண்டு உறுப்பினர்கள் மற்றும் மீட்பு
சாதனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அமைச்சு அறிக்கை
ஒன்றில் தெரிவித்தது.
இம்மாநிலங்களில் போலீசார் மேற்கொள்ளும நடவடிக்கைகளில் மலேசிய
கடல்சார் அமலாக்க நிறுவனமும் ஒத்துழைப்பை நல்கும் என அது
குறிப்பிட்டது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண மற்றும் மீட்புப்
பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அதிகாரிகள்
இடும் உத்தரவுகளை முறையாக பின்பற்றி நடக்கும்படி பொது மக்கள்
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.




