கோலாலம்பூர், டிச 28 - டீசல் விநியோகப் பிரச்சனையினால் பாதிக்கப்பட்ட அனைத்து பெட்ரோனாஸ் நிலையங்களிலும் நிலைமை முழுமையாகச் சீரடையும் என்று பெட்ரோனாஸ் டாகாங்கான் பெர்ஹாட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்குள் நிலைமை முழுமையாகச் சீரடையும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இடையூறு இல்லாத சேவையை வழங்கும் அதேவேளையில் அவர்களின் வாழ்க்கையை எளிமையாகவும் சிறப்பாகவும் மாற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தற்காலிக இடையூறுகளின் போது உங்கள் பொறுமை மற்றும் புரிதலை நாங்கள் பெரிதும் போற்றுகிறோம் என்று அது நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
நாடு முழுவதும் உள்ள பல பெட்ரோல் நிலையங்கள் தற்போது டீசல் கையிருப்பு பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் இந்த பிரச்சனை வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பெட்ரோனாஸ் டாகாங்கான் நிறுவனம் கூறியிருந்தது.
முன்னதாக, சரவாக் மற்றும் சபாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் பாதித்துள்ள டீசல் விநியோகப் பற்றாக்குறை குறித்து பெட்ரோனாஸிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கூறியிருந்தது.




