கோலாலம்பூர், டிச 27- கிழக்குக் கரை மாநிலங்களில் வெள்ள நிலைமை
மோசமடைந்து வரும் நிலையில் மீட்பு பணிகளுக்கு உதவ மூன்று
ஹெலிகாப்டர்களை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தயார் நிலையில்
வைத்துள்ளது.
கிளந்தான் மாநிலத்தின் பாச்சோங் நகரை ஒரு ஹெலிகாப்டர்
வந்தடைந்துள்ள வேளையில் அவசியம் ஏற்படும் பட்சத்தில்
பயன்படுத்துவதற்கு ஏதுவாக இரு ஹெலிகாப்டர்கள் திரங்கானுவுக்கு
அனுப்பப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை
இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் வஹாப் மாட் யாசின் கூறினார்.
நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வது, மற்றும்
உணவுகளை விநியோகிப்பது உள்ளிட்ட பணிகளில் இந்த
ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
தீயணைப்புத் துறை தற்போதைக்கு கிழக்குக் கரை மாநிலங்கள் (கிளந்தான்,
திரங்கானு, பகாங்) மீது கவனம் செலுத்தி வருகிறது. காரணம், இங்கு
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை நிவாரண மையங்களுக்கு மாற்ற
வேண்டிய அவசியம் உள்ளது. தீயணைப்புத் துறை உறுப்பினர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கப்படாத போதிலும் படகு போன்ற மீட்பு சாதனங்கள்
கூடுதலாக அங்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார் அவர்.
மீட்பு பணி, உணவு விநியோகம் மற்றும் வான் மார்க்க ஆய்வுப்
பணிகளுக்காக விமானம் ஒன்று கிளந்தான் மாநிலத்திற்கு நேற்று
அனுப்பப்பட்டதாக நேற்று இங்கு நடைபெற்ற “வீரா மேரா போம்பா“ எனும்
பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
குறிப்பிட்டார்.
இதனிடையே, கடந்த 2014 வெள்ளத்தை விட தற்போது நீர் மட்டம்
உயர்ந்து காணப்படுவதாகக் கூறப்படுவது குறித்து கருத்துரைத்த அவர், தீயணைப்புத் துறை மாநில நிலையில் பல்வேறு கோணங்களில் தயார் நிலையை வலுப்படுத்தியுள்ளதோடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடடினயாக அப்புறப்படுத்துவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என்றார்.




