சுங்கை பட்டாணி, டிச 25- இங்குள்ள பெக்கான் லாமா சுங்கை பட்டாணி, ஜாலான் கோல கெட்டிலில் ஒரே வரிசையில் இருந்த 6 கடைகளில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் மூன்று கடைகள் சுமார் 90 விழுக்காடு சேதமடைந்த வேளையில் இதர மூன்று கடைகளில் ஐந்து விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டது என்று சுங்கை பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் துணை தீயணைப்பு ஆணையர் இஸ்மாயில் முகமது ஜைன் கூறினார்.
இந்த தீ விபத்து தொடர்பில் நேற்று பின்னிரவு 12.47 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறிய அவர், சுங்கை பட்டாணியில் இருந்து 14 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை கொண்ட குழுவினர் இரண்டு தீயணைப்பு வண்டிகள், ஒரு தண்ணீர் டேங்கர் மற்றும் ஒரு இ.எம்.ஆர்.எஸ். அவசர உதவி வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் என்றார்.
தீயை அணைக்கும் நடவடிக்கையில் அமான் ஜெயா தீயணைப்பு நிலையம் பாக்கார் ஆராங் தன்னார்வ தீயணைப்பு படை (பிபிஎஸ்), சுங்கை பட்டாணி தன்னார்வ தீயணைப்புப் படை மற்றும் பீடோங் தன்னார்வ தீயணைப்பு படையினரும் உதவினர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீ வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. அச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.








