ஷா ஆலம், டிச.20 - கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஸ்ரீ கெம்பாங்கன் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு உடனடி பேரிடர் நிவாரணத் தொகையாக தலா 250 வெள்ளி வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் இருந்து ஆவணங்களை சேகரிக்கும் பணியில் கிராமத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தற்போது ஈடுபட்டு வருவதாகக் கூறிய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கீ, மேல் நடவடிக்கைக்காக அவை பெட்டாலிங் மாவட்டம் மற்றும் நில அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றார்.
வழங்கப்படும் தகவல்கள் முழுமையாக இருந்தால் ஜாலான் எஸ்.கே. 13/14 கம்போங் பாரு மற்றும் ஜாலான் இண்டா 1/1சி தாமான் யுனிவர்சிட்டி இண்டா ஆகிய இடங்களில் வசிப்பவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் அதிக நேரம் எடுக்காது என்று அவர் சொன்னார்.
குடும்பத் தலைவர்கள் பூர்த்தி செய்வதற்காக விண்ணப்பப் படிவங்களை கிராமத் தலைவர் இன்று எடுத்துச் செல்வார். மேலும், சம்பந்தப்பட்ட அனைத்து குடும்பங்களின் சார்பாகவும் காவல் துறையில் அவர் புகார் அளிப்பார் என்றார் அவர்.
நேற்று நான் குடியிருப்பாளர்களிடம் சேதம் மற்றும் வீட்டின் நிலையை சித்தரிக்கும் காட்சிகளை படம் எடுக்கச் சொன்னேன். இந்த இந்த உதவித் தொகையை விரைவில் விநியோகிக்க ஏற்பாடு செய்யலாம் என்று நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இதுபோன்றச் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள வடிகால் மற்றும் நீர்பாசன அமைப்புகளை மறுசீரமைப்பு செய்யும்படி சுபாங் ஜெயா மாநகர் மன்றத்திற்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.




