கோலாலம்பூர், டிச 19 - இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் ஜப்பானுக்கு மேற்கொள்ளப்பட்ட இரு முதலீட்டு பயணங்களின் வாயிலாக 2,960 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடு மற்றும் 280 கோடி வெள்ளி மதிப்புள்ள ஏற்றுமதி வாய்ப்புகளை முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சு பெற்றது.
அண்மையில் ஜப்பானுக்கு மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் வழி 660 கோடி வெள்ளி மதிப்புள்ள நேரடி அந்நிய முதலீடு மற்றும் 70 கோடி வெள்ளி மதிப்புள்ள ஏற்றுமதி வாய்ப்புகள் பெறப்பட்டதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களான மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், (மிடா) மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டு கழகம் (மாட்ரேட்) ஆகியவற்றின் ஏற்பாட்டிலான இந்த முதலீட்டுப் பயணங்கள் ஜப்பான்-ஆசியான் நினைவு உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. இந்த பேராளர் குழுவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை தாங்கினார் என்று அது குறிப்பிட்டது.
பிரதமர் அன்வார் மற்றும் ஜப்பானின் 25 முன்னணி தொழிலியல் துறையினருடன் வட்ட மேசை மாநாட்டிற்கு அமைச்சும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் ஏற்பாடு செய்திருந்தன.
இந்த புதிய முதலீடுகளில் பெரும்பாலானவை நம் இலக்கு நிர்ணயித்த துறைகளான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரம் மற்றும் மின்னணு, இலக்கவியல் பொருளாதாரம் ஆகியவையும் அடங்கும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் அப்துல் அஜிஸ் கூறினார்.
புத்தாக்கத்தை நோக்கி பயணிப்பதற்கு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் கார்பன் வெளியேற்றம் இல்லாத உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கும் உதவக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் சார்ந்த முதலீடுகளை ஈர்ப்பதில் நாம் கவனம் செலுத்துகிறோம் என அவர் சொன்னார்




