கோலாலம்பூர், டிச 19: பொதுப் போக்கு வரத்தைப் பயன்படுத்தும் போது முகக்கவரி அணிவது தற்போதைக்கு கட்டாயமில்லை என்றாலும், பொதுமக்கள் அவற்றை அணிய ஊக்குவிக்கப் படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
நாடு முழுவதும் சமீபக் காலங்களில் கோவிட்-19 புதிய சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து மக்கள் எந்தவொரு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது முகக்கவரி அணிவது ஊக்குவிக்கப்படுகிறது என்றார்.
"முகக்கவரிகளைப் பயன்படுத்துவது தொடர்பான எந்தவொரு கொள்கை அல்லது ஒழுங்குமுறையையும் சுகாதார அமைச்சகத்தால் மட்டுமே அமைக்க முடியும். போக்குவரத்து அமைச்சகத்தால் சொந்த கொள்கையை அமைக்க இயலாது.
"இதுவரை பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது முகக்கவரி அணிய வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை, நாங்கள் ஊக்குவிக்கிறோம். எனவே, அது பயணிகள் அல்லது பொதுமக்களைப் பொறுத்தது" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று, சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமட் மலேசியாவில் கோவிட்-19 சம்பவங்களின் தற்போதைய நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சுகாதார அமைச்சு கோவிட்-19 மேலாண்மைத் திட்டத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) போன்ற முன்னர் செயல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று அவர் கூறினார்.
– பெர்னாமா




