கோலாலம்பூர், டிச 19 - மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட டர்ஜா பங்ளிமா செத்தியா மக்கோத்தா (பி.எஸ்.எம்.) விருதை மலாயா தலைமை நீதிபதி டத்தோ முகமது ஜபிடின் முகமது டியாவுக்கு வழங்கினார்.
மாமன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் உயரிய விருதுகள், பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட 298 பேரில் டத்தோ ஜபிடின் முன்னிலை வகிக்கிறார்.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் மாட்சிமை தங்கிய பேரரசியார் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் தேசிய இலக்கியவாதி இணைப் பேராசிரியர் லிம் சுவி டின் மாமன்னரிடமிருந்து டர்ஜா பங்ளிமா ஜாசா நெகாரா (பி.ஜே.என்.) எனும் டத்தோ விருதை பெற்றுக் கொண்டார்.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் உள்பட பத்து பேருக்கு ஜோஹான் மங்கு நெகாரா (ஜே.எஸ்.என்.) விருது வழங்கப்பட்டது.
மேலும் ஜோஹான் செத்தியா நெகாரா (ஜே.எம்.என்.) விருதை 12 பேரும் பிந்தாங் கெசாத்திரியா மங்கு நெகாரா விருதை (கே.எம்.என்.) 40 பேரும் பிந்தாங் கெசாத்திரியா செத்தியா டிராஜா விருதை (கே.எஸ்.டி.) ஒருவரும் பிந்தாங் அஹ்லி மங்கு நெகாரா விருதை (ஏ.எம்.என்.) 55 பேரும் பெற்றுக் கொண்டனர்.
மேலும், பிங்காட் பங்குவான் நெகாரா விருது (பி.பி.என்.) 178 பேருக்கு வழங்கப்பட்டது.




