கோலாலம்பூர், டிச 19 - கெடா மாநிலத்தின் லங்காவி மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் போலீஸ் தடுப்புக் காவலில் இருந்தபோது பெண் கைதி ஒருவருக்கு நேர்ந்த மரணத்திற்கு நுரையீரல் அழற்சியே (நிமோனியா) காரணம் என நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
குற்றச் செயலுடன் தொடர்புபடுத்தக்கூடிய எந்த காயமும் அப்பெண்ணின் உடலில் காணப்படவில்லை என்று புக்கிட் அமான் உயர்நெறி மற்றும் தரநிலை கண்காணிப்புத் துறை (ஜி.ஐ.பி.எஸ்.) இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்ரி அகமது கூறினார்.
முப்பத்து நான்கு வயதான பெண் நிமோனியா காரணமாக மரணமடைந்ததை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். ஆகவே, இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
இறந்த தடுப்புக் காவல் கைதி மீதான சவப் பரிசோதனை மற்றும் கோவிட் -19 சோதனை நேற்று அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரியிடம் அறிக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்னர் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு மற்றும் தடுப்புக் காவல் இறப்புகள் மீதான விசாரணைப் பிரிவு இச்சம்பவம் மீது பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடரும் என்றார் அவர்.
1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 3பி பிரிவு மற்றும் ப 15(1) பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காகக் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் லங்காவி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அப்பெண் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.




