கோலாலம்பூர், டிச 19 - பொருளாதார மேம்பாட்டிற்கான முன்மாதிரியாக
ஜப்பான் மற்றும் தென்கொரியாவை நீண்ட காலமாக கருதி வந்த
மலேசியா இப்போது சீனாவுடமிருந்தும் கற்றுக் கொள்வதில் ஆர்வம்
காட்டி வருகிறது.
நாற்பது ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் கொள்கைகளை
மறுஆய்வு செய்வதற்கு நாம் திறந்த மனப்போக்கை கொண்டிருக்க
வேண்டும் என்று ஜப்பானின் ஆஷாஹி ஷிம்புன் பத்திரிகைக்கு அளித்த
பேட்டியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சீனாவை தவிர்த்து ஜப்பான் மற்றும் தென் கொரியாவை மட்டும் குறிக்கும்
‘கிழக்கு‘ என்ற பதத்தை நான் பயன்படுத்த மாட்டேன். இப்போது நாம்
‘கிழக்கை நோக்குவோம்‘ எனக் கூறினால் அந்த கிழக்கு என்ற
வார்த்தையில் சீனாவும் உள்ளடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இலக்கவியல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு மற்றும் இதர
விவகாரங்கள் உலகை மாற்றி வரும் வேளையில் பல ஆண்டுகளுக்கு
முன்னர் அமல்படுத்தப்பட்ட கொள்கையை அது விரிவுபடுத்துவது
அவசியமாகும் என்றார் அவர்.
ஜப்பானுக்கும் தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியானுக்கும்
இடையிலான நட்புறவின் 59ஆம் ஆண்டு நிறைவை விழாவில் கலந்து
கொள்வதற்காக பிரதமர் அன்வார் கடந்த 15ஆம் தேதி ஜப்பானுக்கு ஐந்து
நாள் வருகை மேற்கொண்டார்.
மலேசியா கடுமையான சுதந்திர வெளியுறவுக் கொள்கையைக்
கடைபிடிப்பதாக கூறிய அன்வார், மலேசியாவின் நலன்கள் சார்ந்து
சீனாவுடான விவகாரங்களை அது கையாளும் என்றார்.
நான் ஏபெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த போது ஏன் சீனாவை அதிகம் சார்ந்திருக்கிறீர்கள் என என்னிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அவர்கள் அதிகம் முதலீடு செய்கிறார்கள் என நான் பதில் கூறினேன் என்று அன்வார் சொன்னார்.




