புத்ராஜெயா, டிச 19 - ஊக்கத் தடுப்பூசிப்யைப் பெற விரும்பும் நோய்
பீடிக்கும் சாத்தியம் அதிகம் கொண்ட தரப்பினர் குறிப்பாக ஒன்றுக்கும்
மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதுமான அளவு
கோவிட்-19 தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக சகாதாரத் துறை தலைமை
இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹசான் கூறினார்.
ஊக்கத் தடுப்பூசியைப் பெற விரும்புவோர் அரசாங்க மருத்துவமனைகள்
அல்லது சுகாதார கிளினிக்குகளுக்கு நேரடியாக வரலாம் அல்லது
வருகைக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.
தடுப்பூசியைப் பெற விரும்புவோருக்கு வழங்குவதற்கு ஏதுவாக
போதுமான அளவு ஊக்கத் தடுப்பூசி கைவசம் உள்ளது என்று கோவிட்-19
நோய்த் தொற்று பரவல் தொடர்பில் நேற்று இங்கு நடைபெற்ற சிறப்பு
செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது மற்றும்
சுகாதாரத் துறை துணைத் தலைமை இயக்குநர் (பொது சுகாதாரம்) டத்தோ
டாக்டர் நோர்ஹயாத்தி ருஸ்லியும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து
கொண்டனர்.
புதிய தலைமுறை ஃபைசர் தடுப்பூசி குறித்து வினவப்பட்ட போது, அந்த
தடுப்பூசியை விநியோகிப்பாளர்களிடமிருந்து பெறும் நடவடிக்கையில்
சுகாதார அமைச்சு ஈடுபட்டு வருவதாக டாக்டர் ராட்ஸி தெரிவித்தார்.
அந்த தடுப்பூசி புதியது என்பதால் அதனைப் பெறும் நடவடிக்கையில்
நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இந்த கொள்முதல் நடைமுறைக்குச் சிறிது
கால அவகாசம் தேவைப்படும் என்றார் அவர்.
எனினும், தற்போதுள்ள தடுப்பூசிகள் ஆக்ககரமானவை என்பதோடு
தற்போதுள்ள திரிவுகள் மற்றும் துணை திரிவுகளின் தாக்கத்திலிருந்து
காக்கும் திறனைக் கொண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இது ஒரு உலகளாவிய நிகழ்வு என்பதால் அடுத்து வரும் வாரங்களில்
கோவிட்-19 நோய்த் தொற்று நாட்டில் அதிகரிப்பதற்கான சாத்தியம்
உள்ளதாக அவர் சொன்னார்.




