ஈப்போ, டிச 18: நேற்று கிரியனில் உள்ள பாகன் செராய் பொதுச் சந்தையில் தண்ணீர் தொட்டியில் இருந்து குதிக்க முயன்ற பெண் ஒருவர் தீயணைப்பு வீரர்களால் வெற்றிகரமாகக் காப்பாற்றப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாகப் பிற்பகல் 2.37 மணி அளவில் தனது தரப்புக்கு அழைப்பு வந்தததாகவும் மூன்று நிமிடங்களுக்குள் பாகன் செராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சம்பவ இடத்தை சென்றடைந்தனர் எனவும் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.
"உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது, 39 வயது புத்தி சுவாதீனம் இல்லாத பெண் ஒருவர் சுமார் ஆறு மாடிகள் உயரம் கொண்ட கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியின் உச்சியில் இருந்தது கண்டறியப்பட்டது.
"பாதிக்கப்பட்டவரை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் மீட்பு நடவடிக்கை தலைவர் செயல்பட்டார். பின்னர், மேல் நடவடிக்கைக்காக அப்பெண் காவல்துறையிடம் ஒப்படைக்கப் பட்டார்" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மாலை 4 மணி அளவில் மீட்பு நடவடிக்கை முழுமையாக முடிவடைந்ததாகச் சபரோட்ஸி கூறினார்.
– பெர்னாமா




