அம்பாங் ஜெயா, டிச 18- தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்குரிய
ஆற்றலைப் பெறுவதற்கு ஏதுவாக இலக்கவியல் திறன் மேம்பாட்டுத்
திட்டத்தில் பங்கேற்க சிலாங்கூரில் உள்ள வர்த்தகர்களும் தொழில்
முனைவோரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மலேசிய இலக்கவியல் பொருளாதாரக் கழகம் (எம்.டி.இ.சி.) கடந்தாண்டு
முதல் ஏற்பாடு செய்து வரும் ‘ஜெலாஜா சாயா டிஜிட்டல்‘ (ஜே.எஸ்.டி.)
எனும் திட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 3,300 பேர் பங்கு
கொண்டுள்ளதாகப் புத்தாக்க மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டாக்டர் முகமது ஃபாஹ்மி ஙா கூறினார்.
அவர்களில் 547 பங்கேற்பாளர்கள் இலக்கவிய துறையில் நன்கு தேர்ச்சி
பெற்று அதன் மூலம் விற்பனையையும் வருமானத்தையும்
பெருக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில மக்களுக்கு உதவியதற்காக எம்.டி.இ.சி. க்கு நாங்கள்
நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம். இந்த வெற்றி மற்றவர்களுக்கு ஒரு
எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இதன் மூலம் தங்கள் வருமானத்தை
பெருக்குவதோடு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர்கள்
உதவுகின்றனர் என்றார் அவர்.
இலக்கவியல் சமூகத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக குறைந்த வருமானம்
பெறும் பி40 தரப்பினர், இளைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் மூத்த
குடிமக்களை ஜே.எஸ்.டி.இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என
அவர் குறிப்பிட்டார்.
இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான விழிப்புணர்வை பொது மக்கள்
மத்தியில் அதிகரிக்கவிருக்கிறோம். இதன் வழி அவர்கள் விவேக
வாழக்கை முறையை அனுபவிக்க முடியும் என்தோடு நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களும் இணையான வாய்ப்புகளை பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் சொன்னார்.




