ஜோர்ஜ் டவுன், டிச 15- அரசாங்கத்தின் இ-மடாணி கிரடிட் உதவித் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்திற்கு நிதியமைச்சு தீர்வு காணும் என்று துணை நிதியமைச்சர் லிம் ஹூய் யிங் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் மேலும் அதிகத் தகவல்களைப் பெற தாம் முயன்று வருவதோடு அவற்றை ஆராய்ந்து தீர்வு காணவுள்ளதாக இங்குள்ள பாசார் சௌராஸ்தாவில் 2024ஆம் ஆண்டிற்கான நாட்காட்டிகளை விநியோகம் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இ-மடாணி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பலர் 100 வெள்ளித் தொகையை பெற்றுள்ள போதிலும் தகுதி உள்ள பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்விவகாரம் மீது அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே, துணை நிதியமைச்சராக தாம் நியமனம் செய்யப்பட்டது தொடர்பில் சமூக ஊடங்களில் வெளி வரும் சர்ச்சைகள் குறித்து கருத்துரைத்த அவர், இந்த குறைகூறல்கள் தனது உணர்வுகளை எந்த வகையிலும் பாதிக்காது என்றார்.
கருத்தை வெளியிடும் உரிமை மக்களுக்கு உள்ளது. அந்த கருத்துகளை நான் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். நான் பூரணமானவள் அல்ல,. ஒவ்வொரு மனிதருக்கும் பலவீனங்களும் குறைபாடுகளும் கூடுதல் அம்சங்களும் இருக்கலாம் என்றார் அவர்.
மலேசிய மக்களுக்கும் பினாங்குவாசிகளுக்கும் சிறப்பான சேவையை வழங்க நான் முடிந்த வரை பாடுபடுவேன் என்று அவர் தெரிவித்தார்.








