கோலாலம்பூர், டிச 15: மடாணி மருத்துவத் திட்டம் ஜூன் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட தனியார் கிளினிக்குகளில் 1 மில்லியனுக்கும் அதிகமான இலவச சிகிச்சைகளை 785,623 நோயாளிகளுக்கு வழங்கியுள்ளது..
நேற்று வரை, RM62.5 மில்லியன் செலவில் 2,506 தனியார் கிளினிக்குகளில் 785,623 நோயாளிகளுக்கு மொத்தம் 1,005,645 சிகிச்சைகள் (சிறு நோய்கள்) வழங்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
"இந்தத் திட்டம் அடுத்த ஆண்டும் தொடர்வதற்காக 2024 பட்ஜெட்டில் RM100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இதன் மூலம் அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.
" குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு தரமான சுகாதார சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்த நாடு முழுவதும் உள்ள தனியார் கிளினிக்குகளின் ஈடுபாட்டை அதிகரிப்பதில் சுகாதார அமைச்சு மற்றும் ``ProtectHealth``, அதன் பணியைத் தொடர்ந்து வலுப்படுத்தும்" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மடாணி மருத்துவத் திட்டம் என்பது B40 குழுவின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மலேசிய சுகாதார அமைச்சகத்தின் (KKM) மூலம் அரசாங்கம் செயல்படுத்திய திட்டமாகும்.
ரஹ்மா ரொக்க நன்கொடை பெறுபவர்களுக்கு இந்த திட்டம் தானாகவே வழங்கப்படுகிறது. மேலும், அருகிலுள்ள தனியார் கிளினிக்குகளில் சிறு நோய்களுக்கான சிகிச்சையை இலவசமாகப் பெறுவதற்கு இத்திட்டம் உதவுகிறது.
www.protecthealth.com.my இல் உள்ள ProtectHealth, மற்றும் MySejahtera செயலி மூலம 'மடாணி மருத்துவ திட்டத்தில் சிகிச்சை பெற தகுதி தேவைகள் மற்றும் தனியார் கிளினிக்குகளின் விவரங்களை சரி பார்க்கலாம்.
– பெர்னாமா








