கோலாலம்பூர், டிச 15- நேற்று தொடர்ச்சியாகப் பெய்த அடை மழையின்
காரணமாக மூன்று மாநிலங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது. பேராக்
மாநிலத்தில் வெள்ள நிலைமை மேம்பாடு கண்டு வரும் வேளையில்
நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்கள் வீடு திரும்பத்
தொடங்கியுள்ளனர்.
கிளந்தான் மாநிலத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் 13 தற்காலிக
நிவாரண மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு 114 குடும்பங்களைச் சேர்ந்த
427 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
கோல கிராய் மற்றும் தானா மேரா ஆகிய மாவட்டங்களில் இந்த்த துயர்
துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில சமூக நலத் துறையின்
பேரிடர் தகவல் செயலி கூறியது.
மேலும் கிளந்தான் மாநிலத்திலுள்ள சுங்கை நால், சுங்கை கிளந்தான்,
சுங்கை லானாஸ் ஆகிய ஆறுகளில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவில்
உள்ளதாக வெள்ள தகவல் அகப்பக்கம் தெரிவித்தது.
திரங்கானு மாநிலத்தின் உலு திரங்கானு மாவட்டத்தில் 17 குடும்பங்களைச்
சேர்ந்த 85 பேர் பெல்கிரா கூனோங் மெனேரோங்கில் உள்ள நிவாரண
மையத்தில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
இந்த வெள்ளம் காரணமாக உலு திரங்கானுவில் உள்ள லுபோக்
பெரியோக் தேசியப் பள்ளி மற்றும் பெல்டா மெங்குவாங் தேசிய பள்ளி
ஆகியவை மூடப்பட்டுள்ளதாக மாநில கல்வி இலாகா கூறியது.
இதனிடையே, சிலாங்கூர் மாநிலத்தின் கோல சிலாங்கூரில் நேற்று
பிற்பகல் 2.00 மணி நிலவரப்படி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
எண்ணிக்கை 33 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேராக உயர்வு கண்டது.
நேற்று காலை இந்த எண்ணிக்கை 26 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேராக
இருந்தது.
பேராக் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக அல்-வுஸ்தா பள்ளிவாசலில்
அடைக்கலம் நாடியிருந்த 10 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் நேற்று
மதியம் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.




