புத்ரா ஜெயா, டிச 15 - கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவினால் கொலைக்
குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படுவதிலிருந்து முன்னாள்
பாதுகாவலர் ஒருவர் தப்பினார். தர்மிஸி யாக்கோப் (வயது 28) என்ற அந்த
நபருக்கு மரண தண்டனைக்கு மாற்றாக 33 ஆண்டுச் சிறைத்தண்டனையும்
12 பிரம்படிகளும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த ஆடவரின் இறுதி மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட
மலாயா தலைமை நீதிபதி டான்ஸ்ரீ முகமது ஜபிடின் முகமது டியா
தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு 2023ஆம் ஆண்டு கட்டாய
மரண தண்டனை நீக்கச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான தண்டனையை
மறு ஆய்வு செய்ய ஒப்புக் கொண்டது.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹர்மிண்டர் சிங் டாலிவால் மற்றும்
டத்தோ அபு பாக்கார் ஜாய்ஸ் ஆகியோருடன் இந்த வழக்கை நடத்திய
நீதிபதி முகமது ஜபிடின், குற்றவாளிக்கு எதிரான சிறைத்தண்டனை அவர்
கைது செய்யப்பட்ட தினமான 2015ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி
முதல் அமலுக்கு வருகிறது எனத் தீர்ப்பளித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஐந்தாம் படிவ
மாணவியான தனது காதலியை ஜோர்ஜ் டவுன், தெலுக் கும்பாரில் உள்ள
அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்த குற்றத்திற்காகத் தர்மிஸிக்கு
ஜோர்ஜ் டவுன் உயர்நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம்
26ஆம் தேதி மரண தண்டனை விதித்தது.
தனது காதலியான வயது குறைந்த அப்பெண்ணை அதே இடத்தில், அதே
நேரத்தில் பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றத்திற்காக அந்நபருக்கு
15 ஆண்டுச் சிறைத்தண்டனையும் மூன்றும் பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.




