கோலாலம்பூர், டிச 14 - இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு வரும்
பயணிகளுக்கான விசா விலக்களிப்பைக் கொண்டாடும் வகையில்
இப்போது தொடங்கி வரும் டிசம்பர் 24ஆம் தேதி வரை தென்னிந்தியாவின்
ஏழு நகரங்களுக்கு 189 வெள்ளி கட்டணத்தில் சிறப்பு ஒரு வழி பயணச்
சலுகையை ஏர் ஆசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பயணச் சலுகைத் திட்டத்தில் சென்னை, திருச்சி, ஹைதரபாத்,
பெங்களுர், கொல்கத்தா, மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்கள் இடம்
பெற்றுள்ளதாக ஏர் ஆசியா மலேசியா நிறுவனத்தின் தலைமை செயல்
முறை அதிகாரி ரியாட் அஸ்மாட் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பின் புதிய
மைல்கல்லாக இந்த முன்னெடுப்பு விளங்குகிறது. இது தவிர
திருவனந்தபுரத்திற்கு எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி
தொடங்கி ஏர் ஆசியா பயணச் சேவையை வழங்கவுள்ளது என்றார் அவர்.
இன்று இங்கு நடைபெற்ற ஏர் ஆசியாவின் விசா விலக்களிப்பு அறிவிப்பு
நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த பயணச் சலுகை இப்போதே
தொடங்குவதாகவும் வரும் டிசம்பர் 30 வரை இது அமலில் இருக்கும்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பயணச் சேவையை ஏர்
ஆசியா கணிசமான அளவு அதிகரிக்கவுள்ளத் தகவலையும் வெளியிட்ட
அவர், அடுத்தாண்டு தொடங்கி வாரத்திற்கு 69 பயணச் சேவைகள்
அந்நாட்டிற்கு மேற்கொள்ளப்படவுள்ள வேளையில் இதன் மூலம்
ஆண்டிற்கு 15 லட்சம் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
அடுத்தாண்டில் எங்களின் குறைந்த கட்டண விமானச் சேவையை இந்திய
நகரங்களான ஜெய்ப்பூர், கோவா, வரணாசி மற்றும் வைசாக் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தவுள்ளோம். இதன் முதல் பயணத் தடமாக ஜெய்ப்பூர் விளங்கும் என அவர் சொன்னார்.
இந்த சலுகைத் திட்டத்தின் வாயிலாக மேலும் அதிகமான இந்தியப்
பயணிகள் மலேசியாவுக்கு வருவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றும் அவர்
நம்பிக்கைத் தெரிவித்தார்.




