புத்ராஜெயா, டிச 14 - மலேசிய நிர்வாக நவீனமயம் மற்றும் திட்டமிடல்
மேலாண்மைப் பிரிவு (மாம்பு) புதிதாக உருவாக்கப்பட்ட இலக்கவியல்
அமைச்சின் கீழ் வைக்கப்படும் என்று அதன் அமைச்சர் கோபிந்த் சிங்
டியோ கூறினார்.
இந்த மாம்பு அமைப்பு இதற்கு முன்னர் பிரதமர் துறையின் கீழ்
செயல்பட்டு வந்தது. இனி இந்த மாம்பு அமைச்சு நிச்சயமாக எனது
அமைச்சின் கீழ்வரும் என்று காம்ப்ளெக்ஸ் செத்தியா பெர்டானாவில்
உள்ள மாம்பு அலுவலகத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் பெர்னாமா
செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.
கோவிந்த் சிங்குடன் இலக்கவியல் துறை துணையமைசர் டத்தோ உகாக்
அனாக் கும்போங் மற்றும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ
முகமது ஜூக்கி அலியும் மாம்பு அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர்.
மாம்புவின் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அதன்
தலைமை இயக்குநர் டத்தோ ரோட்ஸி முகமது சஹாட் அமைச்சர்
மற்றும் அவரது குழுவினருக்கு விளக்கமளித்தார்.
இலக்கவியல் அமைச்சின் கீழ் உள்ள பணி இலக்குகள் தொடர்பில் சில
விளக்கங்களைப் பெற வேண்டியுள்ளதாக கோபிந்த் சிங் சொன்னார்.
இது புதிய அமைச்சாக உள்ளதால் எங்கள் அதிகாரத்திற்குட்பட்ட
துறைகளை செம்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டியுள்ளது. இதன் தொடர்பில் விரைவில் நான் செய்தியாளர்
சந்திப்பை நடத்தவிருக்கிறேன் என்ற அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று முன்தினம் அறிவித்த
புதிய அமைச்சரவையில் இலக்கவியல் அமைச்சராக கோபிந்த் சிங் டியோ நியமிக்கப்பட்டார். முன்பு செயல்பட்ட தொடர்பு மற்றும் இலக்கவியல்
அமைச்சின் ஒரு பகுதியாக இந்த அமைச்சு விளங்குகிறது.




