கோலாலம்பூர், டிச 14 - புதிதாக நியமனம் பெற்றவர்கள் உள்பட அனைத்து
அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் தேனிலவு என்று எதுவும் கிடையாது
என்பதோடு அவர்கள் மக்களின் பிரச்சனைகளைக் களைவதற்கு ஏதுவாக
விரைந்து பணிகளை ஆற்ற வேண்டும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தியுள்ளார்.
மிகவும் வறிய நிலையைத் துடைத்தொழிப்பது, முக்கியத் துறைகளில்
ஆற்றல் பெறுவது, பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வது, நாட்டின்
சுபிட்சத்தை உறுதி செய்வது ஆகியவை அரசாங்கம் மற்றும்
அமைச்சரவை உறுப்பினர்களின் முக்கியப் பணியாகும் என்றும் அவர்
தெரிவித்தார்.
ஒவ்வொரு அமைச்சின் புதிய பொறுப்புகளையும் இந்த கூட்டத்தில் நான்
வலியுறுத்த விரும்புகிறேன். முன்னாள் மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் ஆற்றிய பணிகளுக்கும் இந்த நன்றியும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார் அவர்.
அனைத்து இலக்குகளும் முன்னுரிமைகளும் மக்களின் அபிலாஷைகளை
விரைந்து நிறைவேற்றும் விதமாக இருக்க வேண்டும் என்பது எனது
எதிர்பார்ப்பாகும் என அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
இந்த கூட்டத்தில் இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அஜிசான், தோட்ட மற்றும் மூலத் தொழில் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி கனி, சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று முன்னர் பிரதமர் வெளியிட்ட அமைச்சரவை மாற்றத்தில் பல புதியவர்கள் அமைச்சர்களாகவும் துணையமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.




