கோலாலம்பூர், டிச 14 - இம்மாதம் 3 முதல் 9 வரையிலான 49வது நோய்த்
தொற்று வாரத்தில் நாடு முழுவதும் 12,757 கோவிட்-19 நோய்த் தொற்று
சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த
எண்ணிக்கை 6,796 சம்பவங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் நாட்டில் அதிகரித்த போதிலும்
பொதுவாக நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதோடு நடப்பு சுகாதார
வசதிகள் கூடுதல் சுமையையும் எதிர்கொள்ளவில்லை என்று சுகாதாரத்
துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு
ஹசான் கூறினார்.
நாட்டில் தற்போது பதிவாகியுள்ள கோவிட்-19 பெருந் தொற்றுச்
சம்பவங்களில் பெரும்பாலானவை மிதமான தாக்கத்தைக் கொண்டவை
என்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற வேண்டிய
அவசியமில்லை என்று அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் நோய்த் தொற்று பீடிக்கப்பட்ட
சந்தேகத்தின் பேரில் மருத்துவமனைகளின் சாதாரண வார்டுகளிலும் தீவிர
சிகிச்சைப் பிரிவு வார்டுகளிலும் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
முந்தைய வாரத்தைக் காட்டிலும் 1.4 விழுக்காடு அதிகரிப்பைக்
கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப்படும் கோவிட்-19
நோயாளிகளின் எண்ணிக்கை 0.5 விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில்
கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 9 வரையிலான காலக்கட்டத்தில்
பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 0.72 விழுக்காடு உயர்வு
கண்டுள்ளது என்றார் அவர்.




