குவாந்தான், டிச.14: கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஐந்து வயது சிறுவன், நேற்று சிம்பாங் செபயாங் வெள்ள குடியிருப்பு, கோலா ரோம்பின், ரோம்பின் அருகே உள்ள ஆற்றில் இறந்து கிடந்தான்.
சிறுவன் விழுந்ததாகக் கூறப்படும் இடத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் தேடல் மற்றும் மீட்புக் குழுவினரால் (SAR) மாலை 5.30 மணியளவில் ரிஸ்க் ரமாடினா ஜமாலுடினின் உடல் கண்டுபிடிக்கப் பட்டது என ரொம்பின் மாவட்ட காவல் துறைத் தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ஹரி முக்தார் கூறினார்.
திங்கள் கிழமை மாலை 5.25 மணியளவில் பாதிக்கப்பட்டவர் காணாமல் போனதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அச்சிறுவன் தனது மூன்று உடன்பிறப்புகளுடன் வீட்டிற்கு அருகிலுள்ள ஜெட்டியில் மீன் பிடிக்கும்போது ஆற்றில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
"நாங்கள் திங்கட்கிழமை முதல் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். நேற்று சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப் பட்டது. உடல் மேல் நடவடிக்கைக்காக ரொம்பின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
தேடுதல் நடவடிக்கையில் 116 அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் கிராம மக்கள் உட்பட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
– பெர்னாமா




