ஷா ஆலம், டிச 13 - இவ்வாண்டிற்கான சிலாங்கூர் மாநில பள்ளி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக ஐந்து பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக மொத்தம் 178,000 வெள்ளி வழங்கப்பட்டது.
மொத்தம் 993 பள்ளிகளை உள்ளடக்கிய உதவித்தொகையை மண்டபங்கள், கழிவறைகள், கூரைகள் மற்றும் உள்கூரைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரிசெய்ய பயன்படுத்தலாம் என்று மாநில அரசு துணைச் செயலாளர் (மேம்பாடு) தெரிவித்தார்.
லபோஹான் டாகாங் தேசியப் பள்ளிக்கு 50,000 வெள்ளியும், பெட்டாலிங் ஜெயா தேசிய பள்ளிக்கு 48,000 வெள்ளியும் டேசா பிங்கிரான் புத்ரா தேசிய பள்ளிக்கு 40,000 வெள்ளியும் செக்சன் 27 (2) தேசியப் பள்ளி மற்றும் ஸ்ரீ பெடேனா தேசியப் பள்ளிக்கு தலா 20,000 வெள்ளியும் விநியோகிக்கப்பட்டது என்று டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.
இந்த திட்டத்திற்காக இவ்வாண்டில் செய்யப்பட்ட மொத்த ஒதுக்கீடு 2 கோடியே 65 லட்சம் வெள்ளியாகும். மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மாநில அரசு காட்டும் அக்கறையை இது காட்டுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்த உள்கட்டமைப்பு தொடர்பான உதவித் திட்டம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பயனளிக்கும் எனக் கூறிய அவர், இது எதிர்காலத்திலும் தொடரும் என்று அவர் கூறினார்.
இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தில் இன்று நடைபெற்ற பள்ளிகளுக்கான நிதி ஒப்படைப்பு நிகழ்வுக்கு தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.




